ஆழி

>> Saturday 21 November 2009


வெகு நாட்களாகியிருந்தது கடல் பார்க்க என்று போய். சென்ற ஏழெட்டு மாதங்களில் ஓரிரு முறை தவிர்த்து அந்தப் பக்கம் போகும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளவில்லை. வலிந்து தவிர்த்ததில் கடல் என்னை விட்டு வெகுதொலைவில் சென்றிருந்தது. மழை பெய்து ஓய்ந்திருந்த ஒரு வார இறுதி நாளில் கடல் பார்த்தே ஆக வேண்டுமென வம்படியாய் என் பிரிய சினேகிதியை இழுத்துக் கொண்டு சென்றிருந்தேன். கடற்கரை யாருமற்று வெறிச்சென்றிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலரைத் தவிர வேறு யாருமேயில்லை. மழை காரணமாய் இருக்கலாம். கடற்கரை மணல் மழையீரத்தில் நசநசத்திருந்தது. நல்ல குளிர் காற்று. வெகுநேரம் நின்றபடியே கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.

கடல் என்னோடு நேரடியாய் சம்பந்தப்பட்டிருப்பது இந்த மூன்று வருட காலமாகத் தான். அதுவும் இவ்வளவு சமீபமாய் கடல் எனக்கு வாய்க்குமென்று நினைத்து கூட இல்லை. இந்த நகர வாசத்திற்கு முன்பாகவெல்லாம் கடலென்பது ஒரு வசீகரக் கனவாகவே இருந்து வந்திருக்கிறது. கரை தொடும் முன்கடலை விட ஆழ்கடலின் மீதான ஈர்ப்பு எனக்கு மிக மிக அதிகம். கரையில் நின்று பார்க்கும் போதெல்லாம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருக்குமொரு தொலைதூரப் புள்ளியில் கடலின் தன்மை எப்படியிருக்கும், அதன் அடியாழத்தில் வசிக்கும் மீன்கள், திமிங்கலங்கள் இன்னபிற கடல் ஜந்துக்கள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பதுண்டு.

கடல் ஒரு வசீகரம். எதையும் யாரையும் சட்டென்று தன்னோடு ஈர்த்துக் கொள்ளும். வார்த்தைகள் ஏதுமற்று நிச்சலனமாய் இருக்கும் கணங்களிலெல்லாம் என் மனம் கடலின் மொழியை வெகு சீக்கிரத்தில் கிரகித்துக் கொள்ளும் தன்மையதாய் இருக்கிறது. சந்தோஷித்திருக்கும் தருணங்களிலெல்லாம் கடல்மொழி எனக்கு அவ்வளவாகப் புரிவதேயில்லை. இது ஏன் என்று பல சமயங்களில் யோசித்திருக்கிறேன்.

கடல் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாய் எதோவொன்றை எனக்குப் புரிய வைத்துக் கொண்டேயிருக்கிறது. மனிதர்களை, மனங்களை, பிரியத்தை, பிரிவை, மரணத்தை ஒவ்வொரு முறையும் உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. கடல் ஒரு போதும் பயத்தை எனக்கு உணர்த்தியதேயில்லை. மாறாக ஒரு ஆச்சரியத்தை அதன் தவிப்பை தனிமையை உணர்த்தியிருக்கிறது. கடல் தன் தனிமையின் ஆற்றாமையை அலைகளின் மூலமாக பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறதோ என்றும் அவ்வப்போது நினைத்துக் கொள்வதுண்டு.

கடற்கரையின் ஈர மணல், என்றோ ஒருநாள் தன் தந்தையுடன் இதே கடற்கரை மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறு குழந்தையை நினைவுபடுத்தியது. அன்று அக்குழந்தை ஆரஞ்சு நிறத்தில் ஃப்ராக் ஒன்றை அணிந்திருந்தது நன்றாக ஞாபகமிருக்கிறது. அதன் உடையின் முன்புறம் வெள்ளி நிறத்திலாலான பட்டையான ஜரிகையில் பூ போன்ற ஒரு சிறு முடிச்சிட்டிருந்தது. அக்காட்சியைப் பார்த்தபோதிருந்த அதே சந்தோஷம், அதே புன்னகை சட்டென்று ஒட்டிக் கொண்டது. சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் ஏன் முதன்முறை பார்த்தபோது கொடுத்த அதே உணர்வை பிறகு ஏன் கொடுப்பதில்லை, எதுவோ அவர்களை மாற்றிவிடுகிறதே, அது எது என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன்.

கடல் வசீகரம் என்றால் அலை அதன் உயிர்ப்பு. ஆளுயரத்திற்கு எழும்பும் அலைகளும் உப்பரிக்கும் காற்றும் இருந்திருக்காவிட்டால் கடலும் ஒரு பெரிய்ய்ய்ய குளம் அல்லது ஏரியைப் போன்ற ஒன்றாய் மட்டுமே இருந்திருக்க முடியும். ‘கடல்’ என்ற பெயர் கூட அதற்கு வாய்த்திருக்காது. காற்றிற்கும் அலைக்குமான உறவென்பது ‘இது இப்படித்தான்’ என்று வரையறுத்துக் கூற முடியாத ஒன்றாய் இன்று வரைக்கும் இருக்கிறது. கரை தழுவத் துடிக்கும் காற்றின் தவிப்பை அலை ஓயாமல் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. அது தன் காதலனைச் சேரத் துடிக்கும் கன்னியொருத்தியை நினைவூட்டுகிறது. காற்றின் பிரியத்தை அலை மொழிபெயர்த்து கரைக்குச் சொல்லுகிறது. கேளாத செவியுடைய கரையோ மெளனமாகவே இருக்கிறது. இருந்தும் காற்று தன் பிரியத்தைத் தூதனுப்புவதை நிறுத்துவதேயில்லை. ஒவ்வொரு முறையும் கடலுக்கும் கரைக்கும் காற்றுக்கும் அலைக்குமான தொடர்பு ஒரு புள்ளியில் விரியத் தொடங்கி மீண்டும் அதே புள்ளியில் முடிந்து போகிறது. பிறகு மீண்டும் அதே புள்ளி அதே முடிவு. பிறகு மீண்டும்…

கடல் ஏராளமாய் அள்ளித்தருகிறது. ஆனால் கரையொதுங்கும் சிப்பியைப் பொறுக்கி சிரித்து சிந்தித்து சிலாகித்து அதை பத்திரப்படுத்திக் கொள்வதிலேயே கடலின் பெருமை முடிந்து போகிறது நமக்கு.

- சகாராதென்றல்

Read more...

பொம்ம மண்ணு

>> Thursday 12 November 2009


புதிது புதிதாய் பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் அலாதி விருப்பம் அவளுக்கு. ‘இது என்ன.. அது எப்டி’ என்று எப்போதும் கேள்விகளால் தொணதொணத்துக் கொண்டேயிருப்பாள். நேற்றைக்கும் அப்படித்தான், அவளின் தொணதொணப்பைக் குறைக்க கதை சொல்ல ஆரம்பித்து எங்கெங்கோ சுற்றிய எங்கள் பேச்சு இறுதியாக பொம்மை செய்வதில் வந்து நின்றது. ‘எனக்கும் பொம்ம செய்ணும்’ என்று ஓயாமல் அடம்பிடிக்கத் தொடங்கினாள். கேட்டது கிடைக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டுமென்று அவளுக்குத் தெரியும். இப்போது புதிதாக தரையில் உருண்டு புரண்டு அழுவதை வேறு கற்றுக் கொண்டிருக்கிறாள்.

அவளின் ஓயாத நச்சரிப்பு தாளாமல் களிமண் கிடைக்குமிடம் குறித்து விசாரித்ததில் பக்கத்து ஊர்க்குளத்தில் இருப்பதாகத் தெரியவந்தது. ஒரு அதிகாலை நேரத்தில் களிமண் வெட்டிக் கொண்டுவரக் கிளம்பிய போது ‘நானு.. நானு..’ என்று அவளும் தொற்றிக் கொண்டாள். தன் பிஞ்சுக்கரங்களால் தண்ணீர் வற்றிப் போய் இருந்த அக்குளத்தில் வெகு சிரத்தையாய் அவள் களிமண் சேகரித்ததைப் பார்க்கையில் மனதுக்குச் சந்தோஷமாயிருந்தது.

வீட்டிற்கு வந்ததும், ‘பாப்கார்ன் பொம்ம செய்ய போகும். மம்மு தா நியா’ (நிலா இவளிடம் நியா ஆகி விட்டது ;-)) ) என்றவளை ஆச்சரியமாகப் பார்த்தேன். அவளுக்கு சோறூட்டி விட வேண்டுமென்றால் அவள் ஓடும் இடங்களுக்கெல்லாம் தட்டைத் தூக்கிக் கொண்டு பின்னாலேயே திரிய வேண்டும். அப்போது தான் சற்றேனும் சாப்பிடுவாள். கேட்டது கிடைத்ததும் குழந்தைகள் தான் எவ்வளவு பொறுப்பானவர்களாக மாறி விடுகிறார்கள் எவ்வளவு தூரம் தன்னை அதில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்பதை நினைத்துப் புன்னகைத்துக் கொண்டேன்.

மம்மு முடித்ததும் களிமண்ணை நோக்கி ஒரே ஓட்டம் தான். ‘பாப்கார்ன்’ என்ற என் குரலுக்கு ‘பிஸ்ஸி’ என்ற ஒற்றை வார்த்தையையே பதிலாகப் பெற முடிந்தது. சரியான ரெட்டைவால் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

‘நியா… நியா…’ என்றவளின் குரல் கேட்டுத் திரும்பினேன். அவள் சட்டை முழுக்க மண் அப்பியிருந்தது. களிமண் பிசுபிசுக்கும் கைகளோடு சதுர வடிவிலான பெட்டி போன்ற ஒன்றைச் செய்து வந்திருந்தாள். ‘என்னடா’ என்றதற்கு, ‘இந்தா’ என்று அந்த மண் பெட்டியை என்னிடம் நீட்டி, ‘என்னோட முத்தால்லாம் இந்த பொட்டில போட்டு பூட்டி வச்சிக்கேன். பத்திரமா வச்சிக்கோ’ என்றபடி சிரித்தவளின் மழலைத்தனத்தால் சூழலையும் மீறிக் கண்ணீர் துளிர்த்தது. ‘டிங்கி..டிங்கி..டிங்.. டிங்கி..டிங்கி..டிங்..’ என்று சத்தமிட்டவாறே சின்னதாய் ஒரு டான்ஸ் ஆடிவிட்டு திரும்ப பொம்மை செய்யப் போய் விட்டாள். அவளின் அந்த வார்த்தைகளிலும் முத்தங்களிலும் இருந்து வெளி வர வெகுநேரம் பிடித்தது எனக்கு. குழந்தைகள் மிக அற்புதமானவர்கள் என்பதை ஒவ்வொரு நிமிடமும் உணர்த்திக் கொண்டே இருக்கும் என் செல்லப் பிசாசு இவள் தான்.

வெகுநேரம் கழித்து, ‘என்ர பொம்மய வந்து பாரு’ என்று கையைப் பிடித்துக் கூட்டிப் போனாள். கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு போனாள் என்றும் சொல்லலாம். அவளுக்குத் தெரிந்த வரையில் சின்னச் சின்னதாய் செய்து வைத்திருந்தாள். இது கோயில், இது நாக்குட்டி (நாய்க்குட்டி), இது பாப்பாவோட சோச்சி தட்டு என்று சொல்லிக் கொண்டே போனாள். அவை ஒவ்வொன்றும் தன் உண்மையான சொரூபத்தைத் தொலைத்து விட்டு விதவிதமான வடிவங்களில் இருந்தன. தட்டையாய் நெளி நெளியாய் நீண்ண்ண்ட பாம்பும், அவளது விளையாட்டுச் சாமான்களும் ஒழுங்கற்றதொரு வடிவத்தில் உருக் கொண்டிருந்தன. குழந்தைகள் படைப்புலக பிரம்மாக்கள் என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது, அங்கிருந்த ஒவ்வொரு பொம்மையும். ‘என்கு கார் செஞ்சு தர்றியா’ என்றவளின் கேள்விக்கு ‘ஓ! செய்யலாமே’ என்ற பதிலோடு அவளின் விளையாட்டு உலகில் சங்கமிக்கத் தயாரானேன்.

பெரியவர்கள் தான் குழந்தைகளைக் குழந்தைகள் என்று சொல்லி தனித்து வைத்து விடுகிறார்கள். ஆனால் குழந்தைகள் என்றுமே நம்மைத் தன்னுலகில் இழுத்துக் கொள்ளத் தயாராகவே இருக்கின்றன. நீளும் அவர்களது கரங்களை வாஞ்சையோடு பற்றிக் கொள்பவர்களைத் தன்னோடு சேர்த்துக் கொள்வதும் மறுப்பவர்களை ஒரு சிறு புன்னகையோடு வழியனுப்பி வைப்பதும் குழந்தைகளுக்கேயுரிய குணாதிசயங்களாக என்றென்றும் இருந்து கொண்டிருக்கின்றன. அவர்களின் முகம் நிறைக்கும் புன்னகை நம் அகம் நனைக்கும் மழைத்துளிகளாக மாறி விடுவது அதிசயம் தான். ஒரு சிறு சிணுங்கல், ஒரு பெரும் புன்னகை இவற்றோடு எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வது எப்போதுமே குழந்தைகள் தான் என்பதை அவளோடிருக்கும் ஒவ்வொரு கணமும் நான் உணர்ந்திருக்கிறேன்.

களிமண்ணில் சின்னதாய் கார் செய்து அதனுள்ளே ஒரு கல் மனிதனையும் அமர்த்திய பிறகு தான் எங்கள் விளையாட்டு ஓய்ந்தது. ‘ஹய்யா!’ என்று குதித்துக் கொண்டே கைதட்டியவளைப் பார்க்கையில் நானும் குழந்தையாகவே இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் பிறந்தது. என் கன்னத்தில் மாறி மாறி அவளிட்ட முத்தத்திற்காகவேனும் இப்படியேயிருக்க வேண்டும் என்ற எண்ணமும் வந்து போனது. இப்படி இருவித மனநிலையில் என்னைத் தவிக்க வைத்துக் கொண்டிருக்கும் இவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அந்தச் சமயத்தில் நினைத்துக் கொண்டேன்.

‘என்கு குடு’ என்றவளிடம் ‘பொம்ம நல்லா காஞ்சப்புறம் தான் விளையாடணும். இப்போ எடுத்தீன்னா உடைஞ்சுடும்’ என்று அவளின் கைகளில் களிமண் பொம்மைகளின் ஈரத்தை உணர்த்தியதில், ‘ம்ம்.. சரி’ என்று அரைமனதுடன் தலையை ஆட்டினாள். பொம்மைகளை பத்திரமாய் வெயிலில் எடுத்து வைத்தோம். சிறிது நேரத்திற்கொரு முறை ‘பொம்ம காஞ்சிருக்குமா, நா பாக்கட்டா’ என்று கேட்டுக் கொண்டும் ஓடி ஓடி அதைப் பார்த்துக் கொண்டுமிருந்தாள். அவளின் இன்றைய கனவில் அந்த பொம்மைகள் அவளோடு பேசக்கூடும், அவளை சந்தோஷிக்கச் செய்யும் என்றெனக்குத் தோன்றியது.

*
காலையில் கண்விழித்ததும் ‘பொம்ம காஞ்சிடுச்சா’ என்பதே அவளின் முதல் கேள்வியாக இருந்தது. என் பதிலுக்குக் காத்திருக்கப் பொறுமையின்றி பொம்மைகளைக் காய வைத்த இடத்திற்குச் சென்றவள், ‘பொம்மய காணம் நியாஆஆ…’ என்று கத்தியபடியே ஓடி வந்தாள்.

பொம்மைகளின் கதியை அவளிடம் சொல்ல இயலாமல் தவித்தேன். ‘என் பொம்ம வேணும்’ என்று விசும்பியவள் பெரிதாய் குரலெடுத்து அழத் தொடங்கினாள். பார்த்துப் பார்த்துச் செய்தவையெல்லாம் ஒரே கணத்தில் ஒன்றுமில்லாமல் போய்விடும் வலியை நன்கு உணர்ந்திருப்பதால் பொம்மைகளின் கதியை அவளிடம் எப்படிச் சொல்வது எனப் புரியாமல் தவித்தேன். அழுபவளைச் சமாதானப்படுத்தி, ‘நேத்து மழ பெஞ்சுச்சுல்ல. அதுல நம்ம பொம்ம கரைஞ்சு போய்டுச்சுடா’ என்று அவளின் காதோரம் மெதுவாய் சொன்னேன். ‘என் பொம்ம வேணும்.. என் பொம்ம வேணும்..’ என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லி அழுது கொண்டிருந்தாள். அவளிடம் நிஜத்தைச் சொன்னது தவறோ என நினைத்தேன். ‘மறுபடியும் வேற பொம்ம செஞ்சுக்கலாண்டா.. எஞ்செல்லம்ல அழக்கூடாது’ என்ற என் வார்த்தைகள் அவளை ஏதோ செய்திருக்க வேண்டும். ‘அங்க மறுபடி பொம்ம மண்ணு இருக்குமா’ என்று கண்ணீர் வழியும் கண்களுடன் கேட்டவளின் மனஓட்டம் புரிந்தது. ‘ஓ!! நிறைய்ய்ய இருக்கும். நாம போய் எடுத்துட்டு வந்து பெருசா பொம்ம செய்யலாம் சரியா’ என்றதும் சட்டென்று சந்தோஷம் ஒட்டிக் கொண்டது அவளிடம். ‘இப்பயே போலாமா’ என்றவளுக்கு ‘ம்ம்.. போலாமே’ என்று சிரித்துக் கொண்டே சொன்னதில் ‘டுர்ர்ர்ர்…’ என்று சத்தமிட்டபடி இறுகக் கட்டிக் கொண்டாள்.

- சகாராதென்றல்

Read more...

மழைக்குறிப்புகள் - 4

>> Sunday 1 November 2009



மறுபடியும் வரக்கூடும்
தேங்கிய முற்றத்து நீரில்
கப்பல் விட்டுச் சிரிக்கும்
மழலையின் பூரிப்பில்
தன்னை நனைத்துக் கொள்ள
மழை


- சகாராதென்றல்

Read more...

  © Template created by Ourblogtemplates.com

  © Copyright Saharathendral